ஞாயிறு, 27 மார்ச், 2011

மணமகன் தேவை



மன ஊனமில்லா மணமகன் தேவை
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மன ஊனமில்லா மணமகன் தேவை
...
‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் மணமகளுக்கு

மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல

நீ கொடுக்க வேண்டிய மஹரை

பெண்ணான என்னிடம் கேட்க

நீ கேட்ட மஹரை கொடுக்க

என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்

தன் அனைத்து சுகங்களையும் இழந்து!



என்னைப் பார்க்க வந்த

உன் தாயும், உன் சகோதரியும்

பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்

என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்

வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து

எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்

நீங்கள் தெளிவாக சொன்னால்தான்

அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!



உன்தாயின் பட்டியல் தொடங்கியது

லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்

பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து

ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்

எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய

எத்தனை பேருக்கு பசியாற தருவிய!

(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)



மனை உள்ளது வீட்டை

கட்டி கொடுத்து விடுங்கள்!

(தற்பொழுது குடிசைதான் வீடாம்)

என் குடும்ப சூழ்நிலையில்

இந்த சம்பந்தம் அமையுமா

மணமேடையில் அமருவோமா

என்று மனதுக்குள் அழ!



என் தந்தையோ நோயின்

வாசல்படியை தட்ட

நானோ வீட்டின் நிலைப்படியில்!

எத்தனையோ பேர் என்னை

பெண் பார்த்து சென்ற பிறகும்

இன்னும் முதிர் கன்னியாக

உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!

ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!



பெண் பார்க்க

வந்தவர்களில் சிலர்

என் பையன் சிகப்பு பெண்தான்

பார்க்க சொல்கிறான்

பெண் கருப்புதான்

இருந்தாலும் நாங்கள் கேட்பதை

(வரதட்சனையை) தந்து விட்டால்

என் பையனை

சம்மதிக்க வைத்து விடுகிறோம்!

பணம் படைத்தவர்களின்

கருப்பு நிற பெண் கரையேறி விடும்!

பணம் இல்லா குடும்பத்து

கருப்பு நிற பெண்களை

கடலில் தள்ளி விடலாமா?





பெண்ணை பெற்றவன்

ஜமாத்தில் லட்டர் வாங்கி

ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்

என்று முகம் தெரியா ஊரில்

பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்

பாவா குமராளி வந்திருக்கிறேன்

திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது

உதவி செய்யுங்கள் என்று

துண்டை ஏந்தி நிற்பதை

பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்

கோபம் வரவில்லையா?

என்ன செய்தாய் நீ?

என் தாய் தந்தை மனம்

கோணாமல் நடப்பேன் என்றாய்!



இளைஞனே திருமணம் முடிக்கும்

நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்

மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்

இதுநாள்வரை தாய், தந்தை

பேச்சைகேட்காத நீ கூட திருமண

பேச்சு வார்த்தையில் மட்டும்

என் தாய் தந்தையின் மனம்

நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!



இளைஞனே உன் தெருவில்

திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க

நீயோ பணம் படைத்த வீட்டில்

பெண்ணை தேட!

அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு

வேற வழி இல்லை என்று

பிறமத பையனோடு ஓட!

இப்பொழு வருகிறது உனக்கு கோபம்

என் தெரு பெண்எப்படி ஓடலாம்!

அவளை கண்டால் வெட்டுவேன் என்று!

அவள் ஓடியதற்கு நீயும்

உன்னை போன்றவர்களும்

காரணம் இல்லையா?



முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்

நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு

பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு

கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை

என்ற பெயரில் மணமகள் வீட்டில்

மனசாட்சியும் இல்லை!

மறுமை பயமும் இல்லை உனக்கு!



மணமகனே நான்

உன்னிடம் கேட்கிறேன்

நீ என்ன மஹர் தருவாய்

எனக்கு - எதற்காக என்கிறாயா?

உன் வீட்டில் வந்து

ஆயுள் முழுவதும் உனக்கும்

உன் குடும்பத்திற்கும்

சேவை செய்வதற்கும்!

குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!

உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்

நானும் தகப்பன் என்று

பெருமிதம் அடைவதற்காக!

என் தாய் தந்தையை

என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை

நான் வாழ்ந்த இடத்தையே

விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்

வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு

வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?



இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!

உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்

விழித்தெழுங்கள்!

இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்

நாளை மஹ்ஷர் பெருவெளியில்

இறுதி தீர்ப்பின் நாளின்

அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்

என்ன பதில் சொல்வாய்

தாய் தந்தையை கை காட்டுவாயா?

முடியாது இளைஞர்களே!



நீங்கள் மட்டும்தான் உங்களின்

காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்

வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து

நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்

இந்த வரதட்சனை என்னும் கொடுமையை

அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு

மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!

இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அல் குர் ஆனின் அறிவியல் அற்புதங்கள்

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, October 19, 2009, 12:07
அறிவியல்
“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

ஆழ் கடலில் அலை

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

திருப்பித் தரும் வானம்

பெருவெடிப்புக் கொள்கை

முகடாக வானம்

வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

முளைகளாக மலைகள்

பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

பூமி உருண்டை

பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

ஓரங்களில் குறைந்து வரும் பூமி

மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

புவி ஈர்ப்பு சக்தி

விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

கலப்பு விந்து

கர்ப்ப அறையின் தனித்தன்மை

வேதனையை உணரும் நரம்புகள்

தேன் உற்பத்தி

இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்!  (அல்குர்ஆன் 55:7-9)



மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்!  (அல்குர்ஆன் 21:32)

பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.



இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.

இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.

விமானம் பறப்பது எப்படி???


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)

அல்குர்அன் 55-33